14 ஜூலை 2017

இடது கை பழக்கம், இளக்காரமா....?

இடது கை பழக்கம், இளக்காரமா....?
                 இன்று, நாங்கள் நால்வரும் (சங்கீதா, முகிலன், செந்திரு மற்றும் நான்) கோவில்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டல் கு சாப்பிட போயிருந்தோம். நான் 60 நொடிகளுக்கும் குறைவான தாமதத்தில் அவர்கள் மூவருக்கும் பின், உள் சென்றேன். அதற்குள், அவர்கள் மூவரும் கை கழுவிவிட்டு டேபிளில் அமர்ந்திருந்தனர். நான் டேபிளுக்கு வருவதற்கு முன்னரே முகிலனுக்கும் சங்கீதாவுக்கும் இடையில் வாஷ் பேசினில் இருக்கும் குழாயைப்  பற்றி, கோபம்  மற்றும் அதிருப்தியான முகங்களோடு ஒரு உரையாடல் நடந்துகொண்டிருந்தது. முகிலனிடமிருந்து வந்த, வாஷ்பேசினில் பொருத்தப்பட்டிருந்த குழாயை பற்றியக்  கேள்விக்கு சற்று அதிகமான (அக்கறையுள்ள) கோபத்தோடு சங்கீதாவிடமிருந்து  பதில் வந்துகொண்டிருந்தது. முகிலன் கண்களில் கண்ணீர் திரளத் தொடங்கியிருந்தது. பிரச்னை என்னவென்றால், இடது கை பழக்கமுள்ள முகிலனுக்கு அந்த ஹோட்டலில் இருந்த குழாய், அவனால், பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்த காரணத்தால், "இப்படியெல்லாம் (படத்தை பாருங்க) குழாய் யை வைத்தால் என்னை (முகிலனை) போன்றவர்களெல்லாம் எப்படி கை கழுவுவது" என்ற அவனளவில் நியாயமான கேள்வியை விரக்தியோடு எழுப்பிவிட்டது. 



                         இதற்கான பதிலாக சங்கீதாவிடமிருந்து "மெஜாரிட்டி எப்படி இருப்பாங்களோ அப்டித்தான் அவுங்களுக்காகத்தான் எல்லாத்தையும் வச்சிருப்பாங்க....இதுக்கெல்லாம் feel  பண்ணிட்டு இருக்காத.... அப்டி நமக்கு வேணும்னா, நாமதான் டிசைன் பண்ணனும்... நீ ட்ரை பண்ணு" னு வந்துருச்சு. இந்த பதில் முகிலனை ஹர்ட் பண்ணிருச்சு போல. அவன் கண்களை குளமாக்க , அவன் மனம் தயாராகிக் கொண்டிருந்தது.  "சரி விடு முகி... இதுக்கெல்லாம் feel  பண்ணாத" னு சொல்லி சாப்பிட்டு முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டோம். 
               வீட்டுக்கு வந்த பின்ன தான், சங்கீதாக்கு, முகிலன் முகம் ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கே னு தோணி, என்ன னு கேட்டா. முகிலனும் ஒண்ணும்  இல்ல...ஒண்ணும் இல்ல... னு முகத்த திருப்பிகிட்டே இருந்தான். அவனோட மனசு மெதுவா ஜெயிக்க ஆரம்பிச்சுருச்சு. அவனை தொட்டு மெதுவா பேசி, இதுக்கெல்லாம் கலங்க கூடாது... என்ன ஆச்சு னு கேக்கும் போதுதான் சொல்றான்... "நான் ஹோட்டல் ல, அந்த டேப் அ மாத்தணும் னா  சொன்னேன்?.... ஏன் இப்படிலாம் இருக்கு.... எல்லாரும் யூஸ்  பண்ற மாதிரி சென்டர் ல, குழாயோட திருகு இருந்துச்சுன்னா எல்லாருக்கும் usefull ஆ இருக்கும் னு தான சொன்னேன்....அதுக்கு ஏன் நீங்க அப்டி பதில் சொன்னிங்க" னு கேட்டான். அப்போதான் திரும்பவும் (இதுக்கு முன்னாடியே பல தடவை, மற்றவங்களோட புரியாமையும் அறியாமையும், முகிலனோட இடதுகை பழக்கத்தை ரொம்பவே காயப்படுத்திருக்கு) அவனோட கஷ்டம் எங்க ரெண்டு பேருக்கும் புரிஞ்சது. அவன்  சொல்றது சரிதான்னு புரிஞ்சது.
             முகிலனோட இடது கை பழக்கம் எப்படி னா.... நாம வலது கைல செய்ற எல்லா விசயத்தையும் அவன் இடது கைல செய்வான். நாம இடது கைல செய்ற எல்லா விசயத்தையும் ("எல்ல்ல்ல்லா விசயத்தையும்") அவன் வலது கைல செய்வான். ஆக, நமக்கு நல்ல கையான சோத்தாங்கை, அவனுக்குப் பீச்சாங்கை. நமக்கு கெட்ட கையான பீச்சாங்கை, அவனுக்கு சோத்தாங்கை. இப்டி இருக்கும் போது, சாப்பிட்டு முடிச்சுட்டு அவன் எப்டி சோத்துக் கையோட குழாய திருகுவான் (நீங்க இடது கைல சாப்பிடறவரா உங்கள நெனச்சுக்கிட்டு, சாப்பிட்டு முடிச்சுட்டு படத்துல இருக்குற குழாயில எப்படி கை கழுவுவீங்க னு யோசிச்சு பாருங்க..... சிரமமா இருக்கும்ல....)?
           இதுக்கும் அதிகமா லாம் அவனுக்கு நடந்துருக்கு.... பந்தியில, இல்லனா ஹோட்டல் ல, அவன்  சாப்பிட உக்காந்து இலைல அவனோட சோத்தாங்கைய வைப்பான்.... உடனே எங்க இருந்தோ  ஒரு குரல்  ரொம்பவே கலாச்சார, ஒழுக்க அக்கறையோடு ஒலிக்கும் "தம்பி... வலது கைல சாப்பிடு... அது என்ன அசிங்கமா இடது கைல சாப்பிடுற..." னு. சின்ன வயசுல அவனுக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம, எங்களை பாப்பான்... நாங்க அந்த குரலுக்கு விளக்க பதில் குடுத்துட்டு, நீ சாப்பிடு னு அவனை சாப்பிட வைப்போம். அவன் வயசு கூட கூட, இப்டி வர்ற குரல்கள் அவனுக்கு எரிச்சலை தர ஆரம்பிச்சு பொது இடங்கள்ல....குறிப்பா பந்தில உக்காந்து சாப்பிட்றத... ரொம்ப முக்கியமா, கோவில்கள் ல நடக்கும் பந்திகள் ல உக்காந்து சாப்பிடறது தவிர்க்க ஆரம்பிச்சுட்டான்.
          இன்னைக்குத்தான் சொன்னான்... அவன் 8 வது படிக்கும் போது, மதுரை கு ஒரு எக்ஸாம் எழுத கூப்டு போயிருந்தோம். அந்த எக்ஸாம் ஹால் ல இருந்த invigilator, "வலது கைல நீ வாங்குனா தான், நான் உனக்கு பேப்பர் தருவேன்" னு சொல்ல... இவன்,  "இல்ல மேடம், நான் லெப்ட் ஹேண்டர்" னு சொல்ல... அதுக்கு அவுங்க, "அதுனால என்ன.... நீ வலது கைல வாங்குனாதான் உனக்கு பேப்பர் தருவேன்" னு சொல்லி... கடைசில இவன் பெரிய தயக்கத்துக்கு பிறகு வலது கைல பேப்பர் அ வாங்கியிருக்கான் (யோசிச்சு பாருங்க... நாம (வலது கை பழக்கம் உள்ளவங்க) இடது கைல வாங்குவோமா... எவ்வளவு கஷ்டமா இருக்கும்...? அவ்வளவு கஷ்டத்தோட இருந்துருக்கான்).... இத இன்னைக்கு சொல்லி, feel  பண்ணுறான்.  நீ ஏன் அப்டி வாங்குன....? அவுங்கள்ட்ட "நான் வலது கைல வாங்குனா, உங்களுக்கு நான் disrespect பண்றதா ஆகிடும்" னு நீ  சொல்லிருக்க வேண்டியது தான னு.... இல்லைனா, "நான் எக்ஸாம் எழுதல" னு சொல்லிட்டு வெளில வந்து என்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தான னு சொன்னேன். ஆனா, இந்த ரெண்டு பதில் ல எத அவன் சொல்லிருந்தாலும், "திமிர பாரேன்... இந்த வயசுலயே" னு தான் சொல்லிருப்பாங்க.... "அப்பா அம்மா எப்படி வளத்துருக்காங்க பாரு" னு சொல்லிருப்பாங்க ( பல முறை, எங்க ரெண்டு பேருக்கும் குழந்தையை எப்படி வளக்கணும் னு லாம், ரொம்ப பேரு பாடம் நடத்திருக்காங்க). ரொம்பவே feel பண்ணிட்டான்.... இடது கைய யூஸ் பண்றது அவ்வளவு தப்பா னு, ரொம்பவே feel பண்ணிட்டான்.
             நாங்க, அவனோட இடது கை பழக்கம், எவ்வளவு பெருமையான விசயம்.... சமுதாயத்துல ரொம்ப கம்மியான ஆள்களுக்குத்தான் இடது கை பழக்கம் இருக்கும்.....அப்டி இருக்குறவங்க எவ்வளவு தனித்திறமைகளை (முகிலன், ஓவியம் நல்லா வரைவான் (https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16425952_1299331273438676_1291734299210777393_n.jpg?oh=1df8f385f03d7c6b27168b5dad069778&oe=5A0CB4B6) (http://epaperbeta.timesofindia.com/Gallery.aspx?eid=31807&id=07_02_2017_104_074_005&type=P&artUrl=WHEN-NOVICES-AND-EXPERTS-SHARED-THE-SAME-PLATFORM-07022017104074).... நல்லா புத்தகம் வாசிப்பான்.... நெறய கேள்விகள் கேப்பான்....) வச்சுருப்பாங்க..... நம்ம சொந்தகாரங்க, எங்களோட friends லாம் உன்ன பத்தி... உன்னோட lefthand  யூசேஜ் பத்தி எவளோ நல்லா பேசுறாங்க.... இடது கை பழக்கம்  உன்னோட குறை இல்லை, உன்னோட பலம்.... அந்த ஹோட்டல் ஓனர் நாம யோசிக்கிற மாதிரி யோசிச்சிருக்க மாட்டாரு.... அவருக்கு யாரும் அப்படி சொல்லிருக்க மாட்டாங்க... இல்லைனா, இதுதான் சீப் ஆ இருந்துருக்கும்... அதுனால வியாபார நோக்கத்துல அப்டி செஞ்சுருப்பாரு .....னு சொல்லி அவனை தேத்துனோம். 
              அப்புறமா, நான் சங்கீதா ட்ட...." அவன் கேட்ட கேள்விக்கு, நீ "ஆமா டா முகி... நீ சொல்றது சரிதான்... கஷ்டமா தான் இருக்கும் ல....? நாம இதுக்கு ஏதாவது செய்யணும் டா... நாம ட்ரை பண்ணுவோம்" னு அமைதியா  சொல்லிருக்கணும் னு அவன் எதிர்பார்த்திருக்கான் னு சொன்னேன். சங்கீதா சொன்ன பதில்லையும் குறை இல்லை... இப்படியே நாம அவன் feel  பண்றத சப்போர்ட் பண்ணி தடவிக் கொடுத்துட்டே இருந்தோம்னா, அவன் எப்படி சூழலை புரிஞ்சு நடக்க பழகுவான் னு அப்டி ஒரு பதிலை சொல்லிருக்கா. 
              இந்த சம்பவம் மூலம் கிடைத்த பாடங்கள்  ரெண்டு : 
1. சிறு பிள்ளைகளையும் அவர்களின் கேள்விகளையும் கையாள்வதில் பெருங்கவனம் செலுத்த வேண்டும் (சிறு பிசகும், பெருங்கவலை யைத் தந்துவிடும்). 
2. பொது இடங்களில், அனைவரும் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - எங்க வீட்டுல, எல்லா குழாய்கள்லையும் நடுவுல தான் திருகு இருக்கு... எல்லாரும் சிரமம் இல்லாம பயன்படுத்துற மாதிரி..... (அந்த ஹோட்டல் ஓனர் ட்ட போயி பேசலாம் னு இருக்கோம்).

24 ஏப்ரல் 2017

வாசிப்போமா....?

                        முறை படுத்தப் படாத ஒரு வகையான புத்தக வாசிப்புப் பழக்கம், என் சிறு வயதிலிருந்தே இருந்ததாக எனக்கு ஞாபகம். பள்ளிக்கூட நாள்களில் ராணி, ஆனந்த விகடன், குமுதம், அம்புலிமாமா, முத்தாரம், ராணி காமிக்ஸ் புத்தகங்கள் வாசித்திருக்கிறேன்.  பாக்யராஜின் பாக்யா இதற்கு அடுத்த தலைமுறை புத்தகம். இப்போதும் சத்தமில்லாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
                             என் அம்மாவிற்கு கதை புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போதும், ரமணி சந்திரன் புத்தகங்கள் என் அம்மாவின் பிரியங்கள்.  அம்மா அளவிற்கு, அப்பா தீவிரமான புத்தக வாசிப்பாளர் இல்லை. அவரின் பிற்காலத்தில் (தற்போது), வாழ்க்கைத் தத்துவ நூல்களையும், சுய முன்னேற்ற நூல்களையும் வசித்துக் கொண்டிருப்பதை காண்கிறேன். ஆக, எனது வாசிப்புப்  பழக்கம், வார இதழ்களிலும், பாக்கெட் நாவல்களிலும் தான் ஆரம்பித்தது (நல்ல வேலை அப்படியாவது ஆரம்பித்தது...... அம்மாவிற்கு நன்றிகளும், அனுமதித்த அப்பாவிற்கு வணக்கங்களும்).
                             மதுரை தூய மரியன்னை பள்ளி காலங்கள் முழுவதுமே, இப்படித்தான் கழிந்தது. பள்ளி இறுதி வருடங்களில், என் தோழன் பாலசுப்ரமணியன் புண்ணியத்தில் சினிமா பாடல்களின் மேல் நாட்டம் வந்தது..... கேசட்டில் பாடல் பதிவு பண்ண மதுரை ரோடுகளில் திரிந்திருக்கிறோம். ஒவ்வொரு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையிலும் பாலு மாமா, மலை மலரில் (தின மலரில்....?) வெளிவரும் அந்த வாரத்தில் TV இல் இந்தி மொழியில் ஒளிபரப்பாகவிருக்கும் மகாபாரத கதையின் தமிழ் விளக்கத்தை வாசித்து புரியும்படி சொல்லுவார் (உண்மையில், அக்காலகட்டத்தில் இத்தகைய விஷயங்களை பொருள் புரியும்படி  வாசிக்க பழகியிருக்கவில்லை).
                      கல்லூரி ஒரு திருப்புமுனையை என் வாசிப்புப் பழக்கத்தில் ஏற்படுத்தியது. பள்ளி வயது அறிமுகப்படுத்திய ரெண்டாந்தர  புத்தகங்களின் உயர் வடிவம் கல்லூரியிலும் கிடைத்தது. கூடவே, நண்பர்களின் அறிமுகத்தில், கவிதை புத்தகங்களும், புதிய நாவல் ஆசிரியர்களும் கிடைத்தனர். வைரமுத்து கவிதை புத்தகங்களை வாசித்து பிடித்த வரியை அடிக்கோடிட்டு பிடித்தவர்களுக்கு கொடுத்த காலம் அது. பாலகுமாரன் நாவல்கள் வாசிக்கிறேன் என்று கர்வமாக அலைந்த காலம் அது. தோழர்கள், ரமணன், ஜான், லீனா மணிமேகலை எனக்கு அறிமுகப்படுத்திய  புத்தகங்களும், அவர்கள் மற்றும் பிற நண்பர்களுடனான  பேச்சுகளும் தான், இன்று நான். ஜான், ரமணன், பிரான்சிஸ் மூவரும் அளித்த எங்கள் திருமண பரிசுகளில் ஒன்றான விகடன் பிரசுரத்தின் "ரொமான்ஸ் ரகசியங்கள்" புத்தகம் இன்றும் எங்கள் வீட்டு புத்தகங்களோடு ரகசியம் பேசிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கும், ஜான் புதிய புத்தகங்கள் வாங்கும் போது,  தெரியப்படுத்துகிறான்..... நல்ல வாசிப்பாளன்.
                         கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்த பின்னர் அதுவரை அறிமுகமில்லாத  வேறு ஒரு இலக்கிய பாதையை நண்பர்கள் அறிமுகப் படுத்தினர். பேராசிரிய நண்பர்கள் சுப்பையா பாரதி மற்றும் பிரகாஷ் நினைவுகூரத் தக்கவர்கள். சுந்தர ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை" யை பிரகாஷ் வாசிக்கத் தந்தார். தி.ஜா.  வின் "மோகமுள்" ளை பாரதி, சுருங்க சொல்லி விளங்க வைத்து, வாசிக்க வைத்தார்.  காலச்சுவடு அறிமுகமானது..... தாமரை யும்  தெரிந்தது..... அனந்த விகடனும் தொடர்ந்தது. "மிர்தாதின் புத்தகம்", மும், திருக்குரானும் பின்னாட்களில் அண்ணன் அபுதாஹிரின் அறிமுகங்கள். அடடே தருணங்களையும், ஆச்சரிய அறிமுகங்களையும் புத்தகங்கள் சில நேரம் நமக்குத் தரும்...... சுரேஷ் அறிமுகப் படுத்திய தஞ்சை ப்ரகாஷ் அப்படி ஒன்றுதான். சுரேஷை அப்படி நான் பழகியது இல்லை. அவர் தந்த "மீனின் சிறகுகள்" நிச்சயமாக எனக்குப் புது அனுபவம் தான்.
                         சங்கீதாவின் கவிதை ஆர்வம், இயல்பாகவே புத்தகங்கள் வாங்குவதற்கு மாத பட்ஜெட்டில் தனியே பணம் ஒதுக்க வழிவகை செய்த்து. மனைவியும் வாசிப்புப் பழக்கம் உடையவராக இருப்பது, ஆனந்தம் தான். திருமணமான புதிதில், இருவரும் இணைந்தே கவிதைகளும், கட்டுரைகளும், கதைகளும் வாசித்திருக்கின்றோம்.  வாசித்து சுவாசித்திருந்திருக்கின்றோம். இணையோடு இணைந்து வாசித்துப் பாருங்கள்.... அது ஒரு சுகானுபவம். எங்கள் மகனுக்கும் (முகிலன்) மகளுக்கும் (செந்திரு) வாசிக்கும் பழக்கத்தைத் தந்திருக்கிறோம்.  நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளை நாங்கள் முடிந்த வரை குடும்பமாகவே சென்று பார்த்து வருகின்றோம்.
                          என் மாமனார், கவிஞர். சாகோவி (சா.கோவில்பிள்ளை, விளாத்திகுளம்) ஒரு மிகச் சிறந்த தீவிர வாசிப்பாளர். பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிச சித்தாந்ந்தங்களிலும், வள்ளுவ நெறிகளிலும் அதி தீவிர ஈடுபாடுகொண்டு இன்றளவும் முறையான கட்டமைக்கப் பட்ட வாசிப்புப் பழக்கத்தை கடைபிடித்துக் கொண்டிருப்பவர். மிக அதிகமான நூல்களை, அவரின் நூலகத்தின் வழி, எனக்குள் கடத்தியதில் அவரின் பங்கு அளப்பரியது.  அவரின் இல்லத்தில் நிகழும் எங்களின் ஒவ்வொரு சந்திப்பும், ஆரோக்கியமான விவாதங்களாகவும், கருத்து மோதல்களாகவும், சிந்தனை அறிதல்களாகவுமே இப்போதும் இருந்துகொண்டிருக்கிறன. இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் வாசிப்பை விரிவுபடுத்தி, இலக்கிய கூட்டங்களில் கவிதைகளாகவும், உரைகளாகவும் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு ஆதரவாகவும், தீண்டாமைக்கு எதிராகவும் வாள் வீசிக் கொண்டிருப்பவர். எங்கள்  திருமணம் தந்த இந்த உறவு, எனக்குப் பல தள  புத்தகங்களை அறிமுகப் படுத்தியது.
                           சென்னை IIT சூழல் வேறு ஒரு தளத்தை என் புத்தக வாசிப்பிற்கு ஏற்படுத்தித் தந்தது. கைலாசநாதனின் நட்பு, மாற்று சிந்தனைகளையும் புத்தகங்களையும்  அள்ளித் தந்தது. இன்றும் எங்கள் இருவரின் நேர் பேச்சோ, அலை பேச்சோ புத்தகங்களைப் பேசாமல் முடிந்ததில்லை. பொன்னியின் செல்வன் நாவலின் கடைசி தொகுதியை ஓர் இரவில் வாசித்து முடித்தேன்.
                           என் இதுவரையிலான வாழ்வில், புத்தகங்கள் பல ஆச்சரியங்களைத் தந்துள்ளன. பல புதிய அறிமுகங்களைத் தந்துள்ளன. பலர் அறிமுகப் படுத்திய புத்தகங்களை வாசித்துள்ளேன். அறிமுகமான சிலருக்காகவும் நான் புத்தகங்கள் வாசித்துள்ளேன். எனக்கு அறிமுகமான புத்தகங்களை பலருக்கு நான் அறிமுகப் படுத்தியுள்ளேன்.... குறிப்பாக என் மாணவ நண்பர்கள் பலருக்கு (பிரவின்  குமார், சினேகா, ரெங்க ராஜன், கொடிமலர், சரஸ்வதி, லட்சுமி பிரியா, அபியா....). அவர்களுக்காக நான் புத்தகம் வாசித்துள்ளேன். சினேகா விற்காக வாசித்து பேசியதும், காந்தி கருணா, பிரவின் குமார் மற்றும் என் மருமகன் சுந்தர மகாலிங்கம் உடனான புத்தக உரையாடல்களும் எப்போதும் சிறப்பானவைகளாகவே இருந்திருக்கின்றன.
                          இப்புத்தக வாசிப்புப் பழக்கம், பரிசுகளைப் புத்தகங்களாகவே என்னைத் தர வைத்துள்ளது. எங்கள் புது வீடு புகு விழாவிற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு புத்தகங்களைப் பரிசளித்து மகிழச் செய்தது.
                       இப்பொழுதெல்லாம், நான் சந்திக்கும் இளம் தலைமுறைகளிடம் தவறாது வாசிக்க சொல்லுகிறேன்...... எதையாவது வாசிக்க சொல்லுகிறேன்.... நானும் வாசிப்பை முறை படுத்த முயற்சித்துக் கொண்டேதானிருக்கிறேன்.... ஆமாம்..... என் சிறு வயதில் ஆரம்பித்த முறைப்படுத்தப் படாத வாசிப்பு, மேல் பத்திகளில் குறிப்பிட்ட  மற்றும் என் நினைவில் இல்லாத இவ்வளவு பெரிய வாசிப்பாளர்களையும், அறிஞர்களையும் கடந்த பின்னரும் இன்னும் முறைப்படவில்லை. நான் வாசிக்க எடுத்தப் புத்தகங்கள் பல இன்னும் முடிக்கப் படாமலே மூடிவைக்கப் பட்டிருக்கின்றன. அஞ்ஞாடியும், காவல் கோட்டமும், கல்குதிரையும், மிர்தாதின் புத்தகமும் இன்னமும் அப்படியே என் வாசிப்புப் பாதையில் பாதியிலேயே நிற்கின்றன.
                        நான், வாசிப்பை இன்னும் முறை படுத்த வேண்டும்.... வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்த வேண்டும்..... ... வாசிப்பின் ஆழத்தை அதிகப் படுத்த வேண்டும்..... வாசித்துப் பேச வேண்டும்...... சுவாசம் இருக்கும் வரை வாசிக்க வேண்டும்......
                      தலைப்புகளைப் பகிர்வோம்...... வாசிப்புப் பழக்கத்தை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவோம்...... பண்படுவோம்.
                      உலக புத்தக தின வாழ்த்துகள் !!!

22 மார்ச் 2017

பயணிக்க வேண்டிய தூரம்....

சமீபமா, ஒரு போட்டிக்கு 4 நடுவர்களில் (2ஆண்கள், 2 பெண்கள்) ஒருவனாக நானும் கலந்துகொண்டேன். 3 ரவுண்டுகள் இருந்த அந்த போட்டியில் 2வது ரவுண்டுக்கு, கலந்துகொண்ட 4 போட்டியாளர்களுக்கு தலா ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்க (8 தலைப்புகளில்) சொல்லி ஒரு நிமிஷம் அந்த தலைப்பில் பேசவேண்டும். நான் பரிந்துரைத்த தலைப்புகளில் மென்சஸ், stayfree/whisper போன்றவையும் அடக்கம். மற்ற பெண் நடுவர்களின் "சார் இது வேணுமா" என்ற தயக்கத்தோடும், போட்டியை ஓருங்கிணைத்த ஒரு மாணவியின் "சார் மென்சஸ் இருக்கட்டும் stayfree/whisper வேண்டாம்" (இதுவே அதிகம் சார். Srayfree/whisper தலைப்புலாம் பசங்க பேசமாட்டாங்க) என்ற சம்மதத்தோடும் மென்சஸ் தலைப்பை இணைத்தோம். அதிர்ஷ்டவசமாக (யாருக்கு...?) மென்சஸ் தலைப்பு ஒருவருக்குக் கிடைக்க, மற்ற தலைப்புகளைப் பெற்ற இதர போட்டியாளர்களால் எப்படி தொடர்ந்து ஒரு நிமிஷம் பேச முடியவில்லையோ அதேபோல், இவராலும் முழுமையாக ஒரு நிமிஷம் பேச முடியவில்லை. ஆறுதல் என்னன்னா, தலைப்பைக் கண்டு தயங்காமல், உடனே பேச ஆரம்பித்தார். போட்டியாளர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பது உபரித் தகவல். போட்டியின் தலைப்பு:நட்சத்திரம். ஆணில் பெண்ணும், பெண்ணில் ஆணும் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.